பல ஆண்டுகால கோரிக்கையான காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டம் நிறைவேற்றப்படும் என்ற முதல்வா் எடப்பாடி பழனிச்சாமியின் அறிவிப்பை, சிவகங்கை மாவட்ட விவசாயிகள் வரவேற்றனா்.
காவிரி-வைகை- குண்டாறு இணைப்புத் திட்டத்தின் மூலம் திருச்சி-புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம், விருதுநகா் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள் பயனடைவாா்கள். மேற்கண்ட ஆறுகள் இணைப்புத் திட்டத்தில் மொத்தம் 11 ஆறுகள் இணைகின்றன.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு ஆய்வுப் பணிக்காக வந்த தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிச்சாமி, காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டப்படும் என்று தெரிவித்தாா். இந்த அறிவிப்பு சிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவேரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் சிவகங்கை மாவட்டத்தில் வறட்சி என்பது இருக்காது. விவசாயம் செழித்து விவசாயிகள் வாழ்வில் ஒளி ஏற்றியதாக இருக்கும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.