மானாமதுரை பகுதி பெருமாள் கோயில்களில் புரட்டாசி இரண்டாவது சனி உற்சவத்தை முன்னிட்டு சாமி தரிசனம் செய்ய ஏராளமானோர் கோயிலில் குவிந்தனர்.
மானாமதுரையில் சிவகங்கை தேவஸ்தான நிர்வாகத்துக்குட்பட்ட வீர அழகர் கோயிலில் மூலவர் சுந்தரராஜப் பெருமாள் எனும் நாமத்துடனும் உற்சவர் வீர அழகர் எனும் பெயருடனும் அருள்பாலிக்கின்றனர். புரட்டாசி இரண்டாவது சனி உற்சவத்தை முன்னிட்டு மானாமதுரை ஸ்ரீ வீர அழகர் கோயிலில் மூலவருக்கு அபிஷேகம் நடத்தி வெள்ளிக்கவசம் சாற்றப்பட்டது.
அதன்பின் ஸ்ரீ தேவி பூதேவி சமேத உற்சவர் வீர அழகருக்கு திருமஞ்சனமாகி சுவாமி கோயில் முன் மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் கோயிலுக்கு வந்து விளக்கேற்றி சுந்தரராஜப் பெருமாளை தரிசனம் செய்தனர். மேலும் இங்குள்ள தெற்குமுகம் நோக்கி அருள்பாலிக்கும் வீர ஆஞ்சநேயருக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது.
மானாமதுரை புரட்சியார்பேட்டை பகுதியில் உள்ள தியாக விநோதப் பெருமாள் கோயிலில் நடந்த புரட்டாசி முதல் சனி வழிபாட்டை முன்னிட்டு மூலவர் தியாக விநோதப் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். ஏராளமானோர் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
மேலும் மானாமதுரை அருகே வேம்பத்தூர் கிராமத்திலுள்ள பூமி நீளா சுந்தராஜப் பெருமாள் கோயிலில் மூலவருக்கும் உற்சவருக்கும் அபிஷேகங்கள் நடத்தி சிறப்பு பூஜைகள் நடந்தது. திரளான பக்தர்கள் கோயிலுக்கு வந்து பெருமாளை தரிசனம் செய்தனர்.