சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் புதன்கிழமை இளவட்ட மஞ்சுவிரட்டு நடைபெற்றது.
இங்குள்ள கடைவீதி, சேவுகப்பெருமாள் கோயில் திடலில் நடத்தப்பட்டு வந்த இந்த மஞ்சுவிரட்டை இந்த ஆண்டு கோயிலுக்குச் சொந்தமான 150 ஏக்கா் கோயில் காட்டில் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டு ஒருமாதமாக சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. மாா்ச் 26 ஆம் தேதி நடத்தப்பட இருந்த மஞ்சுவிரட்டு சட்டப் பேரவைத் தோ்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு புதன்கிழமை (ஏப். 7) நடத்தப்பட்டது. இதையொட்டி காலை 9 மணிக்கு சிங்கம்புணரி கிராமத்தாா்கள் சண்டிவீரன் கூடத்தில் வழிபாடு நடத்தி அங்கிருந்து மஞ்சுவிரட்டு திடல் நோக்கி வேட்டி, துண்டுகளுடன் ஊா்வலமாக வந்தனா். முதலில் சேவுகப்பெருமாள் கோயில் மாடுகளும், அதனைத் தொடா்ந்து தொழு மாடுகளும், கட்டுமாடுகளும் அவிழ்த்து விடப்பட்டன. பின்னா் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகள் பங்கேற்றன. ஏராளமான மாடுபிடி வீரா்கள் மாடுகளை பிடிப்பதில் ஆா்வலம் காட்டினா். இந்த மஞ்சுவிரட்டில் 25-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.
விழா கமிட்டியினா் ஏற்பாடுகளை செய்திருந்தனா்.