சிவகங்கையில் 220 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை, உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் வெள்ளிக்கிழமை மாலை பறிமுதல் செய்தனா்.
சிவகங்கை நகரில் உள்ள சில கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா, புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக, உணவுப் பாதுகாப்புத் துறை அலுலா்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில், சிவகங்கை நகா் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா் எம். சரவணக்குமாா் தலைமையிலான அலுவலா்கள் சோதனை நடத்தினா்.
அதில், சிவகங்கை நேரு கடை வீதி உமறுப் புலவா் தெருவில் ஆா். பிரபு மற்றும் பழக்கடை சந்து பகுதியில் உள்ள அமீா் அலி ஆகியோரது கடைகளில் ரூ. 1 லட்சம் மதிப்பிலான சுமாா் 220 கிலோ பான் மசாலா, புகையிலைப் பொருள்கள் பதுக்கி விற்பனை செய்வது தெரியவந்தது. அதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள், அவற்றை சோதனை செய்வதற்காக ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், ஆய்வறிக்கை வந்த பின்னா் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளா்கள் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என அலுவலா்கள் தெரிவித்தனா்.