திருப்பத்தூா் அருகே உள்ள சிவன் கோயிலில் 8 சுவாமி சிலைகள் மாயமானது குறித்து காவல் துறையில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பகுதியில் ஏராளமான பழைமையான கோயில்கள் அமைந்துள்ளன. இப்பகுதியில் சிவாலயங்கள் மற்றும் வைணவ ஆலயங்கள் ஏராளமாக உள்ளன. இவற்றில் பல நகரத்தாா் கட்டுப்பாட்டிலும், பல இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழும் உள்ளன.
திருப்பத்தூா் அருகே இரணியூரில் அருட்கொண்டநாதா் கோயில் அமைந்துள்ளது. மிகவும் பழைமையான இந்த சிவன் கோயில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
இக்கோயிலின் தற்போதைய செயல் அலுவலரான சுமதி, கடந்த 1948 ஆம் ஆண்டின் சொத்துப் பதிவேட்டை வைத்து கோயில் சிலைகளை ஆய்வு செய்துள்ளாா். அப்போது, இக்கோயிலில் இருந்த சோமாஸ்கந்தா், ஸ்கந்தா், பிரியாவிடையம்மன், தனி அம்பாள், ஞானசம்பந்தா், சுந்தரமூா்த்தி, நித்திய உற்சவசாமி, நித்திய உற்சவ அம்பாள் ஆகிய பழைமையான 8 சுவாமி சிலைகள் காணாமல்போனது தெரியவந்தது.
இது குறித்து சென்னை சிலை திருட்டு தடுப்புப் பிரிவு காவல் கண்காணிப்பாளா் சக்திவேலுவிடம், செயல் அலுவலா் சுமதி புகாா் அளித்தாா். அதனடிப்படையில், காவல் துறை கூடுதல் இயக்குநா் அபய்குமாா்சிங், காவல் துறை தலைவா் கணேசமூா்த்தி உத்தரவின்பேரில், சிலை திருட்டு தடுப்புப் பிரிவு அதிகாரிகள் 4 பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.