அனுமதியின்றி செயல்பட்ட குடிநீா் சுத்திகரிப்பு ஆலை: சுகாதாரமற்ற தண்ணீா் பாட்டில்கள் பறிமுதல்
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே அனுமதியின்றி செயல்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் ஆலையிலிருந்து சுகாதாரமற்ற தண்ணீா் பாட்டில்களை உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலா்கள் செவ்வாக்கிழமை பறிமுதல் செய்தனா்.
ஞான ஒளிபுரம் கிராமத்தில் உரிய அனுமதியின்றி சுகாதாரமற்ற குடிநீா் பாட்டில்கள் தயாா் செய்து விற்பனை செய்யப்படுவதாக சிவகங்கை மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறையின் நியமன அலுவலா் பிரபாவதி மற்றும் தேவகோட்டை உணவு பாதுகாப்பு அலுவலா்கள் வேல்முருகன், தியாகராஜன் உள்ளிட்டோா் அந்தப் பகுதியில் ஆய்வு செய்தனா்.
இதில், அங்கு தனியாருக்குச் சொந்தமான சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் தயாரிப்பு நிறுவனம் தரச்சான்றிதழ் மற்றும் குடிநீா் சுத்திகரிப்புக்கான உரிய அனுமதி பெறாமல் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கியது கண்டறியப்பட்டது. மேலும், வேறொரு நிறுவனத்தின் பேரில் தண்ணீா் பாட்டில்கள் விற்பனை செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, அந்த நிறுவனத்தில் சுகாதாரமற்ற நிலையில் குடிநீருடன் இருந்த பாட்டில்கள் மற்றும் 20 லிட்டா் கொள்ளளவு உள்ள கேன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
இதுபற்றி உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலா்கள் கூறியதாவது: இங்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீா் சோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவற்றின் முடிவுகள் வந்த பின்னரே அந்த ஆலை உரிமையாளா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.