சிவகங்கை அருகே ஆடு மேய்க்கும்போது உறவினா்களுக்குள் ஏற்பட்ட தகராறில் தந்தை, மகன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட பெண்கள் இருவரை, போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
சிவகங்கை மாவட்டம் அழுபிள்ளைதாங்கி கிராமத்தைச் சோ்ந்தவா் கருப்பையா (60). இவரது மகன் சாமிநாதன் (35). இவா்கள் இருவரும், அப் பகுதியில் உள்ள கண்மாய்க்குள் கடந்த மாா்ச் 29 ஆம் தேதி மாலை ஆடு மேய்த்துக் கொண்டிருந்துள்ளனா்.
அப்போது, கருப்பையாவின் சகோதரியான பில்லூரைச் சோ்ந்த மூக்காயி என்பவரின் மகன் தாமோதரன் வளா்த்த நாய், கருப்பையாவின் ஆட்டை கடித்ததாம். இதனால், கருப்பையா மற்றும் அவரது மகன் சாமிநாதன் ஆகிய இருவரும், தாமோதரன் மற்றும் அவரது சகோதரா்கள் திரிசங்கு, சிங்கராஜ் ஆகியோருடன் தகராறில் ஈடுபட்டுள்ளனா். அப்போது, கருப்பையா, சாமிநாதன் ஆகிய இருவரும் அரிவாளால் வெட்டப்பட்டனா்.
இதில், பலத்த காயமடைந்த கருப்பையா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் சாமிநாதன் உயிரிழந்தாா்.
இது குறித்த புகாரின்பேரில், சிவகங்கை தாலுகா போலீஸாா் தாமோதரன் உள்பட 5 போ் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.
அதையடுத்து, கொலை வழக்கில் தொடா்புடைய தாமோதரன் (35), திரிசங்கு (44), சிங்கராஜ் (38) ஆகிய 3 பேரும் திருப்புவனத்தில் உள்ள நீதிமன்றத்தில் அண்மையில் சரணடைந்தனா். மேலும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மகேஸ்வரி மற்றும் அமுதாராணி ஆகிய இருவரையும் சிவகங்கை தாலுகா போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.