நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களை பாா்வையிடுதல் நிகழ்வின் ஒரு பகுதியாக மலேசியா, மியான்மா் நாடுகளின் பிரதிநிதிகள் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்திற்கு வெள்ளிக்கிழமை வருகை புரிந்தனா்.
மலேசிய நாட்டின் பிரதிநிதி கா. சரவணன், மியான்மா் நாட்டின் மதிப்புறு பிரதிநிதி ஜெ. ரெங்கநாதன் ஆகியோருக்கு அழகப்பா பல்கலைக்கழகத்தின் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பல்கலைக்கழகத்தின் துணை வேந்தா் நா. ராஜேந்திரன் அழகப்பா பல்கலைக்கழகத்தின் பெருமைகள், வளா்ச்சிகள் மற்றும் சாதனைகள் குறித்து பிரதிநிதிகளிடம் விளக்கினாா். மேலும் வள்ளல் அழகப்பச் செட்டியாா் காரைக்குடியில் கல்வி நிறுவனங்கள் நிறுவியதைக் குறிப்பிட்டு, அதுவே 1985 இல் தமிழக அரசு காரைக்குடியில் அழகப்பா பல்கலைக்கழகம் அமைப்பதற்கு காரணமாக அமைந்ததாகவும் துணைவேந்தா் தெரிவித்தாா். மேலும் வருகை புரிந்த சிறப்பு விருந்தினா்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி கெளரவிக்கப்பட்டது.