கீழடி 7- ஆம் கட்ட அகழாய்வு: முதுமக்கள் தாழிகளிலிருந்து பானைகள் கண்டெடுப்பு

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெற்றுவரும் ஏழாம் கட்ட அகழாய்வில் கொந்தகைப் பகுதியில் கிடைத்த 2600 ஆண்டுகளுக்கு முந்தைய முதுமக்கள் தாழிகளிலிருந்து குறியீடுகளுடன் கூடிய பானைகள்
கீழடி 7- ஆம் கட்ட அகழாய்வு: முதுமக்கள் தாழிகளிலிருந்து பானைகள் கண்டெடுப்பு


மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெற்றுவரும் ஏழாம் கட்ட அகழாய்வில் கொந்தகைப் பகுதியில் கிடைத்த 2600 ஆண்டுகளுக்கு முந்தைய முதுமக்கள் தாழிகளிலிருந்து குறியீடுகளுடன் கூடிய பானைகள் புதன்கிழமை கண்டெடுக்கப்பட்டன.

கீழடியில் தமிழக தொல்லியல் துறை சார்பில் ஏழாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பிப்ரவரி 13 ஆம் தேதி தொடங்கிய இந்த அகழாய்வுப் பணிகள் கீழடி, அகரம், கொந்தகை ஆகிய பகுதிகளில் நடைபெற்று வருகின்றன.

அப்போது கொந்தகையில் 3 குழிகள் தோண்டப்பட்டு 7 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. இதில் 3 மற்றும் 4 ஆம் எண் கொண்ட முதுமக்கள் தாழிகளில் இருந்த பொருள்கள் ஆய்வுக்காக வெளியே எடுக்கப்பட்டன. 3 ஆம் எண் கொண்ட தாழி முழுமையாக கிடைத்ததால் அதற்குள் மனித எலும்புகள், பானைகள் மற்றும் இரும்பு ஆயுதம் உள்ளிட்டவை இருந்தன.

இதில் சிறிய வடிவிலான பானைகளில் ஒரே மாதிரியான குறியீடுகள் காணப்படுகின்றன. இது உணவுப் பாத்திரம் அல்லது குவளையாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. 19 செ.மீ. விட்டமுள்ள ஒரு   உணவுப் பாத்திரத்தின் உயரம் 4.5 செ. மீட்டர் உள்ளது. மற்றொரு பாத்திரம் 14 செ.மீ. விட்டமும், 16 செ.மீ. உயரமும் உள்ளது. மற்றொரு பாத்திரம் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. 

மூன்று குறியீடுகளும் எதனைக் குறிக்கிறது என்பது குறித்து அடுத்த கட்ட ஆய்வுக்குப் பின்னரே தெரியவரும். கீழடி 6 ஆம் கட்ட அகழாய்வில் 42 குழிகளில் 39 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. 

அவற்றிலிருந்து 20 எலும்புக் கூடுகள் வெளியே எடுக்கப்பட்டன. இதில் சிலவற்றில் இதுபோன்ற பாத்திரங்கள் இருந்தன. ஆனால் அதில் குறியீடுகள் எதுவும் காணப்படவில்லை. ஏழாம் ஆம் கட்ட அகழாய்வில் இதுவரை வெளியே எடுக்கப்பட்டுள்ள 2 முதுமக்கள் தாழிகளிலும் குறியீடுகளுடன் பாத்திரங்கள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் 6 ஆம் கட்ட அகழாய்வில் வெளியே எடுக்கப்பட்ட எலும்புக் கூடுகளை மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் லக்னோவில் உள்ள பீர்பால் ஷாகினி இன்ஸ்டிடியூட் ஆப் பேலியோ சயின்ஸ் ஆய்வு கூடத்துக்கு ஆய்வுக்காக அனுப்பியுள்ளது. 

ஆனால் வடமாநிலங்களில் கரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து அந்த ஆய்வகம் மூடப்பட்டு, அது கரோனா வார்டாக மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

எனவே எலும்புகளின் டிஎன்ஏ பரிசோதனை முடிவுகள் வருவதில் அதிக காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தொல்லியல் ஆய்வாளர்கள் 
தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com