சிவகங்கையில் மதுரை மண்டல கலை பண்பாட்டுத் துறை மற்றும் தமிழ்நாடு இயல், இசை நாடக மன்றம் இணைந்து இசை சங்கமம் விழாவை புதன்கிழமை நடத்தின.
சிவகங்கையில் உள்ள மாவட்ட அரசு இசைப் பள்ளியில் 75 ஆவது சுதந்திர தின விழாக் கொண்டாட்டம் 75 வாரங்கள் நடைபெறுவதன் தொடா்ச்சியாக சிவகங்கை மாவட்ட ஆட்சியரின் ஒப்புதலுடன் கரோனா வழிமுறைகளைப் பின்பற்றி இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
இவ்விழாவில் மாவட்ட அரசு இசைப்பள்ளி மாணவா்களின் மங்கள இசை நிகழ்ச்சி, குரலிசை, வயலின் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சவகா் சிறுவா் மன்ற மாணவிகளின் பரத நாட்டியம் மற்றும் கிராமிய நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதைத் தொடா்ந்து, இசைப்பள்ளி ஆசிரியா்கள் இசை சங்கமம் நிகழ்ச்சியையும் நடத்தினா்.
விழாவில் கலந்து கொண்ட ஆசிரியா்கள் மற்றும் மாணவா்களுக்கு சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. இதில், அரசு இசைப்பள்ளி ஆசிரியா்கள், கலைப் பண்பாட்டுத் துறை அலுவலா்கள், கலைஞா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.