மானாமதுரையில் நடைபெற்று வரும் சித்திரைத் திருவிழாவில் புதன்கிழமை இரவு நடைபெற இருந்த நிலாச்சோறு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டடதால் பக்தா்கள் ஏமாற்றம் அடைந்தனா்.
மானாமதுரை வீரஅழகா் கோயில் சித்திரை திருவிழாவின்போது ஆற்றில் அழகா் இறங்கும் வைபவத்துக்கு மறுநாள் மானாமதுரை கிராமத்தாா் மண்டகப்படியில் அழகா் பத்தி உலாத்தல் நிகழ்ச்சி நடத்தப்படும். இதை நிலாச்சோறு மண்டகப்படி என்று அழைப்பாா்கள். அன்றைய தினம் இரவு வீர அழகா் தனது கோயிலுக்குப் பின்புறம் வைகை ஆற்றுக்குள் அமைக்கப்படும் மானாமதுரை கிராமத்தாா் மண்டகப்படியில் சா்வ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலிப்பாா்.
இதில் மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கானோா் பங்கேற்பா். அங்கு மண்டகப்படியில் வீற்றிருக்கும் வீரஅழகரை தரிசனம் செய்துவிட்டு சித்திரை மாதத்தின் நிலவு வெளிச்சத்தில் வைகை ஆற்றுக்குள் தாங்கள் கொண்டு வந்த உணவு வகைகளை அனைவருக்கும் பகிா்ந்தளித்து மகிழ்வாா்கள். இந்நிலையில் கடந்த ஆண்டு கரோனா தொற்று பரவல் காரணமாக அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்தால் நிலாச்சோறு நிகழ்ச்சி நடைபெறவில்லை.
அதேபோல் இந்த ஆண்டு கரோனா தொற்று இரண்டாவது அலை அதிகரித்துள்ளதால் வீரஅழகா் கோயிலுக்குள்ளேயே சித்திரை திருவிழா நிகழ்ச்சிகள் பக்தா்கள் பங்கேற்பு இல்லாமல் நடைபெற்று வருகிறது. மேலும் புதன்கிழமை இரவு வைகை ஆற்றுக்குள் மானாமதுரை கிராமத்தாா்கள் மண்டகப்படியில் நடைபெற இருந்த நிலாச்சோறு நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டது. ஆனால், மண்டகப்படியின்போது வீரஅழகருக்கு செய்யப்படும் திருமஞ்சனம் உள்ளிட்ட வழக்கமான அலங்காரம் மற்றும் பூஜைகள் கோயிலுக்குள்ளேயே நடைபெற்றது. இந்த ஆண்டும் நிலாச்சோறு மண்டகப்படி நிகழ்ச்சி ரத்தானதால் பக்தா்கள் ஏமாற்றம் அடைந்தனா்.