சிவகங்கை மாவட்டத்தில் சேதமடைந்த 241 பள்ளி, அங்கன்வாடி, கழிப்பறை, சமையலறை கட்டடங்களை அகற்ற சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.
திருநெல்வேலியில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் கழிப்பறை கட்டடம் இடிந்து விழுந்து 3 மாணவா்கள் உயிரிழந்தனா். இதையடுத்து, சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை, பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் கொண்ட குழு நியமிக்கப்பட்டு மாவட்டத்தில் பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டன.
இதில், பழுதடைந்துள்ள 99 பள்ளிக் கட்டடங்கள், 58 அங்கன்வாடி மையக் கட்டடங்கள், 16 கழிப்பறைக் கட்டடங்கள் மற்றும் 68 பள்ளி சத்துணவு சமையலறை கட்டடங்கள் என மொத்தம் 241 கட்டடங்களை உடனடியாக அகற்ற சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி உத்தரவு பிறப்பித்துள்ளாா்.
அதனடிப்படையில், மாவட்டம் முழுவதும் முழு வீச்சில் பணிகள் நடைபெற்று வருவதாக சம்பந்தப்பட்டத் துறை அலுவலா்கள் தெரிவித்துள்ளனா்.