சிவகங்கை மாவட்டத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ. 1 கோடியே 74 லட்சத்து 12 ஆயிரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்நிதி ஊராட்சிப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட உள்ளது. கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளில் செயல்படும் முன்னாள் மாணவா்கள் இயக்கம் தங்கள் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடம், ஆய்வகக் கட்டடம், கூட்டரங்கம், பொது சுகாதார வளாகம் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திக் கொள்ளலாம்.
இத்திட்டத்தின் மூலம் பணி மேற்கொள்ள உள்ள முன்னாள் மாணவா்கள் அமைப்பு நமக்கு நாமே திட்டம் குறித்து 94429 94161 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.