மானாமதுரை ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை விழா
By DIN | Published On : 26th December 2021 04:50 PM | Last Updated : 26th December 2021 04:50 PM | அ+அ அ- |

மானாமதுரையில் மண்டல பூஜை விழாவை முன்னிட்டு ஐயப்பன் உருவம் தாங்கிய ரதம் வீதிகளில் உலா வந்தது.
மானாமதுரை ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மண்டல பூஜை விழா நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அண்ணா சிலை அருகே உள்ள ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் கார்த்திகை மாதம் பிறந்தது முதல் தினமும் அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு மூலவர் ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பனுக்கு அபிஷேகங்கள் நடத்தி ஆராதனைகள், சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. ஒவ்வொரு வாரமும் புதன், சனிக்கிழமைகளில் ஐயப்ப பக்தர்களால் கோயிலில் பஜனை நடத்தி அன்னதானம் செய்யப்பட்டது.
இக் கோயிலில் மண்டல பூஜை விழா நடைபெற்றதை முன்னிட்டு கடந்த சனிக்கிழமை இரவு உற்சவர் ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பனுக்கு அபிஷேகங்கள் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மூலவர் வெள்ளிக்கவசம் அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். அதன்பின்னர் உற்சவர் யானை வாகனத்தில் எழுந்தருளி தேரோடும் வீதிகளில் புறப்பாடாகி வந்தார்.
இதையும் படிக்க- மது போதையில் செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி மிரட்டிய இளைஞர் மீட்பு
இதைத்தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை மூலவர் ஐயப்பனுக்கு உற்சவருக்கும் சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெற்ற சிறப்பு அலங்காரம் அதன்பின் ஐயப்பன் உருவப்படம் தாங்கிய ரதம் கோயிலிலிருந்து புறப்பட்டு மானாமதுரை நகரின் முக்கிய வீதிகளில் உலா வந்தது. வீதிகளில் பக்தர்கள் ஐயனை வரவேற்று பூஜைகள் நடத்தி தரிசனம் செய்தனர்
. மதியம் கோயிலில் நடைபெற்ற அன்னதானத்தில் திரளானோர் பங்கேற்றனர்.
மேலும் மானாமதுரை நகரில் ரயில் நிலையம் எதிரே உள்ள பூரண சக்கர விநாயகர் கோயில் உள்ளிட்ட பல இடங்களில் ஐயப்ப பக்தர்கள் சார்பில் மண்டல பூஜை விழா நடத்தி அன்னதானம் செய்யப்பட்டது. ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை விழாவை முன்னிட்டு கோயில் வளாகம் முழுவதும் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு இரவில் ஜொலித்தது.