சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதர் சுவாமி கோயிலில் திங்கள்கிழமை மார்கழி அஷ்டமி சப்பர விழாவை முன்னிட்டு சுவாமியும் அம்மனும் தனித்தனி சப்பரத்தேர்களில் எழுந்தருளி வீதிகளில் உலா வருதல் நடைபெற்றது.
மார்கழி மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமி நாளில் உலகில் உள்ள அனைத்து ஜீவராசிக்கும் சிவபெருமான் படி அளக்கும் விதத்தைக் குறிக்கும் நிகழ்ச்சியாகக் கருதப்படும் மார்கழி தேய்பிறை அஷ்டமி சப்பர விழா மானாமதுரையில் அருள்மிகு ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பாள் சமேத சோமநாதர் சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்றாகும்.
இவ்விழாவை முன்னிட்டு பிரியாவிடை சமேதமாய் சுவாமியும், அம்பாளும் இரு ரிஷப வாகனங்களில் சர்வ அலங்காரத்துடன் தனித்தனியாக கோயில் மண்டபத்தில் எழுந்தருளினர். அதன்பின் சிறப்பு பூஜைகள் நடத்தி, தீபாரதனைகள் காட்டப்படடதும் பெரிய சப்பரத்தேரில் பிரியாவிடை சமேதமாய் சோமநாதர் சுவாமியும் மற்றொரு சப்பரத்தில் ஆனந்தவல்லியும் எழுந்தருளினர்.
பின்னர் தீபாராதனைகள் நடைபெற்று முடிந்ததும் இரு சப்பர தேர்கள் புறப்பாடு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சப்பரங்களை இழுத்து வந்தனர். மானாமதுரையில் பாகபத் அக்ராஹாரம், கனரா வங்கி சந்து, வழியே ஆடி அசைந்து வந்த சப்பரங்கள் பின்பு தேரோடும் நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்து கோயிலைச் சென்றடைந்தன.
சிவனடியார்கள் கயிலாய வாத்தியம் முழங்கவும் நாதஸ்வர கலைஞர்கள் இசை முழங்கவும் வீதிகளில் பவனி வந்த சோமநாதர் சுவாமியையும் ஆனந்தவல்லி அம்மனையும் மக்கள் வரவேற்று பூஜைகள் நடத்தி தரிசனம் செய்தனர். சப்பரங்களுடன் உடன் சென்ற பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் அரிசியை வீதிகளில் தூவியவாறு சென்றனர்.