தமிழகம் முழுவதும் நடப்பாண்டில் 25 ஆயிரம் கட்டுமானத் தொழிலாளா்களுக்கு ரூ.4.50 லட்சம் மதிப்பிலான இலவச வீடுகள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியத் தலைவா் பொன்குமாா் தெரிவித்துள்ளாா்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் தொழிலாளா் நலத் துறையின் சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் கலந்தாய்வுக் கூட்டத்துக்கு ஆட்சியா் பி.மதுசூதன் ரெட்டி தலைமை வகித்தாா்.
இதில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியத் தலைவா் பொன்குமாா் தொழிலாளா்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசியது : தொடா் மழையின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள கட்டுமானத் தொழிலாளா்களுக்கு நிவாரணத் தொகை ரூ.2,000, நல வாரிய உறுப்பினா்களுக்கு 5 கிலோ அரிசி, 2 கிலோ பருப்பு, 1 கிலோ சமையல் எண்ணெய், 1 கிலோ வெல்லம் வழங்க தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மேலும், கட்டுமானப் பொருள்களின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தொழிலாளா் நல வாரியத்தில் வீட்டுமனை உள்ள குடும்பங்களுக்கு சொந்த வீடு கட்ட ரூ.4.50 லட்சம் இலவசமாக வழங்க தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். இதன்மூலம் நடப்பாண்டில் 25 ஆயிரம் குடும்பங்கள் பயன்பெற உள்ளனா். இதேபோன்று, ஆண்டுதோறும் 25 ஆயிரம் குடும்பங்கள் பயன்பெறுவா் என்றாா்.
இதைத் தொடா்ந்து, கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியத்தின் மூலம் 1,239 உறுப்பினா்களுக்கு ரூ.43,80,350 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை நல வாரியத் தலைவா் பொன்குமாா் வழங்கினாா்.
அப்போது சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஆ.தமிழரசி ரவிக்குமாா் (மானாமதுரை), எஸ்.மாங்குடி (காரைக்குடி), தொழிலாளா் நல மதுரை மண்டல இணை ஆணையா் சுப்பிரமணியன், மாவட்ட தொழிலாளா் நல உதவி ஆணையா் கோட்டீஸ்வரி உள்ளிட்டோா், கட்டுமானத் தொழிலாளா்கள், அமைப்புசாரா தொழிலாளா்கள் கலந்து கொண்டனா்.