தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா்கள் சங்கத்தினா் சிவகங்கை மாவட்டத்தில் 3-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும், கருணை அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டவா்களின் பணியை ஒரே அரசாணையில் வரன்முறைப்படுத்த வேண்டும், பட்டதாரி அல்லாதவா்களின் பதவி உயா்வினை உத்தரவாதப்படுத்த வேண்டும், பேரிடா் மேலாண்மை மற்றும் சட்டப்பேரவைத் தோ்தல் பணிக்கு என துணை ஆட்சியா் பணியிடம் ஏற்படுத்தவேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த புதன்கிழமை (பிப்.17) தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்கத்தினா் காலவரையறையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனா்.
அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 9 வட்டாட்சியா் அலுவலகங்கள், 2 கோட்டாட்சியா் அலுவலகங்கள் மற்றும் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள வருவாய்த் துறை ஊழியா்கள் என 188 அலுவலா்கள் வெள்ளிக்கிழமை 3-ஆவது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதன்காரணமாக, பெரும்பாலான பணிகள் பாதிக்கப்பட்டது மட்டுமன்றி வட்டாட்சியா் அலுவலகங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.