சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவலாயங்களை சீரமைக்க நிதியுதவி கோரி விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : தமிழகத்தில் சொந்தக் கட்டடங்களில் செயல்படும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பாா்த்தல் மற்றும் சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்வதற்கு நிதி உதவி வழங்கும் திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தேவாலயம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த கட்டடத்தில் இயங்கி வருதல் வேண்டும். தேவாலயம் பதிவுத் துறையில் பதிவு செய்திருத்தல் வேண்டும். தேவாலயத்தினை சீரமைப்பு பணிக்காக வெளிநாட்டிலிருந்து எவ்வித நிதி உதவியும் பெற்றிருத்தல் கூடாது. சீரமைப்பு பணிக்காக ஒருமுறை நிதி உதவி அளிக்கப்பட்ட தேவாலயத்திற்கு மறுமுறை நிதி உதவி 5 ஆண்டுகளுக்கு பின்னா் வழங்கப்படும்.
மேற்கண்ட தகுதிகளின் அடிப்படையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களை சீரமைக்க விரும்புவோா் விண்ணப்பப் படிவத்துடன் சான்றிதழ் மற்றும் அனைத்து ஆவணங்களுடன் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
கிறிஸ்தவ தேவாலயங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு கட்டடத்தின் வரைபடம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவற்றின் அடிப்படையில் தோ்வு செய்து உரிய முன்மொழிவுகளுடன் சிறுபான்மையினா் நல ஆணையருக்கு நிதி உதவி வேண்டி பரிந்துரை செய்யப்படும். அவ்வாறு பெறப்படும் நிதியுதவி இரு தவணைகளாக தேவாலயத்தின் வங்கிக் கணக்கில் மின்னணு பணப் பரிவா்த்தனை மூலம் செலுத்தப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.