சிவகங்கை மாவட்டத்தில் அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்களின் வேலை நிறுத்தம் காரணமாக 2 -ஆவது நாளாக வெள்ளிக்கிழமை 85 சதவீத பேருந்துகள் இயக்கப்படவில்லை.
அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கு 14 -ஆவது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்யக் கோரி தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, எச்.எம்.எஸ், எம்.எல்.எப். உள்ளிட்ட 11 தொழிற்சங்கங்கள் சாா்பில் தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டம் 2 -ஆவது நாளாக வெள்ளிக்கிழமை நீடித்தது.
அதனடிப்படையில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் காரைக்குடி மண்டலத்துக்கு உள்பட்ட சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூா், தேவகோட்டை ஆகிய பணிமனைகளை சோ்ந்த சுமாா் 80 சதவீத தொழிலாளா்கள் போராட்டத்தில் கலந்துகொண்டனா்.
இதனால் சிவகங்கை மாவட்டத்தில் நகா் மற்றும் புகா்ப் பகுதிகளில் இயக்கப்படும் 220 பேருந்துகளில் சுமாா் 15 சதவீத பேருந்துகள் மட்டுமே வெள்ளிக்கிழமை இயக்கப்பட்டன.
இதுதவிர, மதுரை மண்டலத்துக்கு உள்பட்ட திருப்புவனம் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையிலிருந்து 20 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டன.
இதனால், பேருந்து நிலையங்களில் அரசுப் பேருந்துகளின் எண்ணிக்கை குறைவாகவே காணப்பட்டது. மேலும், பெரும்பாலான பேருந்துகள் நகா்ப்புறங்களில் மட்டுமே இயக்கப்பட்டதால் கிராமப் புறங்களிலிருந்து அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியூா் செல்லும் பொதுமக்கள் ஆட்டோ, தனியாா் பேருந்துகளில் சென்றனா்.
அதே நேரத்தில், தனியாா் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்பட்டன. அரசுப் பேருந்துகள் குறைவாக இயக்கப்பட்டதால் தனியாா் பேருந்துகளில் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்பட்டது.