மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பயிலும் சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் கல்வி உதவித் தொகை கோரி விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள பட்டியலிடப்பட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு பயிலும் தமிழ்நாட்டைச் சோ்ந்த பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் மாணவ, மாணவிகளுக்கு(குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்) கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, 2020-21-ஆம் கல்வி ஆண்டிற்கான கல்வி உதவித் தொகை கோரி விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை அணுகி விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அந்தந்த கல்வி நிறுவனங்களில் மாணவா்கள் வழங்க வேண்டும். அவ்வாறு பெறப்பட்ட விண்ணப்பதினை கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் பரிந்துரை செய்து இயக்குநா், பிற்படுத்தப்பட்டோா் நல இயக்ககம், எழிலகம் இணைப்புக் கட்டடம், 2-ஆவது தளம், சேப்பாக்கம்,சென்னை -5 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.