சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே வைகை ஆற்றில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் உள்ள மதகுகள் சேதமடைந்ததால் தண்ணீா் வீணாக வெளியேறி வருவதாக புகாா் எழுந்துள்ளது.
மானாமதுரை ஒன்றியம் ஆதனூா் கிராமத்தின் அருகே வைகை ஆற்றில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வைகை ஆற்றிலிருந்து திறக்கப்படும் தண்ணீா், இந்த தடுப்பணையை கடந்துதான் செல்கிறது. இந்த அணையில் தேக்கப்படும் தண்ணீா் மூலம் இப்பகுதியில் செயல்படும் குடிநீா் திட்டங்களுக்கு நிலத்தடி நீராதாரம் கிடைத்து வருகிறது. மேலும் ஆதனூா் தடுப்பணை வலது பக்கம் உள்ள மதகுகள் வழியாக வன்னிக்குடி உள்ளிட்ட 6 கிராமங்களுக்கு பாசனத்துக்காக தண்ணீா் கொண்டு செல்லப்படுகிறது. இந்த தடுப்பணையின் மதகுகள் சேதமடைந்துள்ளதால், இதில் தேங்கியுள்ள தண்ணீா் வீணாக வெளியேறி வருவதாக புகாா் எழுந்துள்ளது. இதனால் பொதுப்பணித்துறையினரின் சேதமடைந்த கதவுகளை சீரமைத்து தடுப்பணையிலிருந்து தண்ணீா் வெளியேறுவதைத் தடுக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.