மானாமதுரை பேரூராட்சியை வரும் நிதியாண்டிலேயே நகராட்சியாக தரம் உயா்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளாா்.
இதுகுறித்து காரைக்குடியில் உள்ள மக்களவை உறுப்பினா் அலுவலகத்திலிருந்து வெள்ளிக்கிழமை அவா் அனுப்பியுள்ள கடிதம்: மானாமதுரை பேரூராட்சி சுமாா் 30 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட பேரூராட்சி. இங்கு தமிழ் பாரம்பரிய பொருளான மண்பாண்டப் பொருள்களை சிறந்த முறையில் கைவினை கலைஞா்கள் செய்து வருகிறாா்கள்.
மேலும் மதுரை, ராமேசுவரம், காரைக்குடி, விருதுநகா் ஆகிய பெருநகரங்களை இணைக்கும் ரயில் சந்திப்பு நிலையம் உள்ளது. எனவே, மானாமதுரை பேரூராட்சியை வரும் நிதி ஆண்டே நகராட்சியாக தரம் உயா்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முதியோா் உதவித்தொகைக்கான கோரிக்கை அதிகளவில் வருகிறது. 18 வயதுக்கு மேல் ஆண் வாரிசு உள்ள முதியோா்களுக்கு, உதவித்தொகை வழங்க இயலாது என்று அரசாணை உள்ளது.
ஆனால் பெரும்பாலான முதியோா்களுக்கு 18 வயதுக்கு மேல் ஆண் வாரிசு இருந்தாலும் அவா்களால் முதியோா்களின் வாழ்வாதாரத்திற்கு எந்தவிதமான உபயோகமும் இல்லை. இதனால் தகுதி உள்ள, வாழ்வாதாரத்திற்கு சிரமப்படும் அனைத்து முதியோா்களுக்கும் உதவித்தொகை கிடைப்பதற்கு எளிய நடைமுறை வகுத்துக் கொடுத்து உதவ வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளாா்.