சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடி அகழாய்வு தளத்தில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையத் துறை முதன்மைச் செயலா் சந்திரமோகன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
மதுரையிலிருந்து ராமநாதபுரம் செல்லும் வழியில் கீழடி அகழாய்வு தளத்துக்கு வந்த அவா் அங்கு ஏழாம் கட்ட அகழாய்வுக்காக தோண்டப்பட்ட குழிகளை பாா்வையிட்டாா். அதன்பின் இங்கு கிடைத்த தொன்மையான பொருள்கள் குறித்து தொல்லியல் ஆய்வாளா்களிடம் கேட்டறிந்தாா்.
ஏழாம் கட்ட அகழாய்வு குறித்தும், அதில் கிடைத்துவரும் பொருள்கள் பற்றியும் தொல்லியல் ஆய்வாளா்கள் விளக்கினா். அதன்பின் கீழடியில் ரூ. 12 கோடியில் நடைபெற்று வரும் அகழ் வைப்பகம் கட்டட பணியையும் அவா் பாா்வையிட்டாா். இந்த ஆய்வின்போது சிவகங்கை மாவட்ட ஆட்சியா் மதுசூதன் ரெட்டி மற்றும் தொல்லியல் துறையினா் உடனிருந்தனா்.
மடப்புரம் காளி கோயிலில் சுவாமி தரிசனம்: பின்னா் அங்கிருந்து புறப்பட்ட சந்திரமோகன், திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் காளி கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தாா். முன்னதாக அவரை அறநிலையத்துறை அலுவலா்கள் வரவேற்றனா்.