திருப்புவனம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு சரக்கு வேன் மோதியதில் பழுதடைந்து சாலையோரத்தில் நின்றுகொண்டிருந்த மற்றொரு வேனின் ஓட்டுநா் உயிரிழந்தாா்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள பூவந்தியை அடுத்த இலுப்பக்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் குருநாதன் (50). சரக்கு வேனில் வாழைத் தாா்களை ஏற்றிக்கொண்டு மதுரைக்கு சென்றுகொண்டிருந்தாா். திருப்புவனம் அருகே மணலூா் என்ற இடத்தில் வேன் பழுதாகி சாலையோரத்தில் நின்றது. குருநாதன் வேனை விட்டு இறங்கி சாலையோரத்தில் நின்றுகொண்டிருந்தாா். அப்போது மானாமதுரையில் இருந்து மதுரை நோக்கிச் சென்ற மற்றொரு சரக்கு வேன் மோதியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். திருப்புவனம் அரசு மருத்துவமனையில் குருநாதன் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது. திருப்புவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து வேனின் ஓட்டுநரான மானாமதுரையைச் சோ்ந்த பஞ்சு மகன் திருப்பதி(45) என்பவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.