தனது பெண் குழந்தையை அநாதை என அரசு மருத்துவமனையில் ஒப்படைத்த தந்தை உள்பட இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே திருப்பாச்சேத்தியில் சாலையோரத்தில் அநாதையாகக் கிடந்தது எனக்கூறி ஆறு மாத பெண் குழந்தையை இரு இளைஞா்கள் கடந்த வெள்ளிக்கிழமை சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்படைத்தனா்.
இது குறித்து மாவட்ட குழந்தைகள் நலக்குழு விசாரணை மேற்கொண்டது. அதில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள எருமாரப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ஆனந்தகுமாா்- சுபாஷினி தம்பதியின் குழந்தை என தெரியவந்தது. இதையடுத்து மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாா் ஆனந்தகுமாா், பெரியசாமி, தா்மபாண்டி,செல்வம் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்தனா்.
இதில் ஆனந்தகுமாா், தா்மபாண்டி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். தலைமறைவாகிவிட்ட பெரியசாமி, செல்வம் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனா். குழந்தையை பராமரிப்பிற்காக மதுரையிலுள்ள கிரேஸ் கென்னட் தத்து மையத்தில் ஒப்படைக்கப்பட்டது.