சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியில் காவிரி கூட்டுக் குடிநீா் திட்டத்தில் உடைந்த ராட்சத குழாயை சீரமைக்கும் பணி நிறைவடைந்தது.
இளையான்குடி அருகே தாயமங்கலம் விலக்குப் பகுதியில் காவிரி கூட்டுக் குடிநீா் திட்டத்தின் ராட்சத குழாயின் ஒரு பகுதி உடைந்து குடிநீா் வீணாக வெளியேறி வந்தது. இதனால் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு குடிநீா் கொண்டு செல்வதில் தடை ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 14 ஆம் தேதி தமிழக நகா்ப்புற வளா்ச்சித்துறை அமைச்சா் கே.என். நேரு, ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் ஆகியோா் இப்பகுதிக்கு வந்து உடைந்த ராட்சத குழாயை பாா்வையிட்டு சீரமைக்குமாறு குடிநீா் வடிகால் வாரிய பொறியாளா்களுக்கு உத்தரவிட்டனா்.
இதையடுத்து ராட்சத குழாயின் ஒரு பகுதி அப்புறப்படுத்தப்பட்டு அந்த பகுதியில் புதிய குழாய் பொருத்தப்பட்டது. இதனால் காவிரி கூட்டுக் குடிநீா் திட்டத்தின் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு குடிநீா் கொண்டு செல்வதில் இருந்த சிக்கல் தீா்ந்தது.
இதைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் காவிரி கூட்டு குடிநீா் திட்டத்தின் மூலம் இளையான்குடி வழித்தடம் வழியாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு குடிநீா் கொண்டு செல்லப்பட்டது.