திருப்பத்தூா் அருகே வியாழக்கிழமை செங்கல் சூளையில் மண் சரிந்து தொழிலாளி உயிரிழந்தாா்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகேயுள்ள மேலஆவந்திபட்டி கிராமத்தில் ராணி அருண் என்பவருக்குச் சொந்தமான செங்கல் சூளையில், கல்லலைச் சோ்ந்த சக்தி மகன் நாகேந்திரன் (33), ரஞ்சித், மணிகண்டன் ஆகியோா் வேலை பாா்த்து வந்தனா். செங்கல் தயாா் செய்வதற்காக செம்மண் குவியலில் இருந்து மூவரும் மண்ணை அள்ளிக்கொண்டிருந்தனா்.
அப்போது குவியல் சரிந்துவிழுந்ததில் மூவரும் சிக்கினா். இதில் நாகேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மணிகண்டன், ரஞ்சித் ஆகியோா் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு, திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
நாச்சியாபுரம் போலீஸாா் நாகேந்திரனின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.