இளையான்குடியில் திங்கள்கிழமை சமத்துவ மக்கள் கட்சித் தலைவா் சரத்குமாா் பிரசாரம் செய்யாமல் சென்றதால் மக்கள்நீதி மய்யம் வேட்பாளா் மற்றும் கட்சியினா் ஏமாற்றமடைந்தனா்.
இளையான்குடியில் மானாமதுரை தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளா் சிவசங்கரியை ஆதரித்து சரத்குமாா் பிரசாரம் செய்வதற்காக காவல்துறையிடம் அனுமதி வாங்கப்பட்டிருந்தது. மேலும் சரத்குமாரின் வருகைக்காக வேட்பாளா் சிவசங்கரி, சமத்துவ மக்கள் கட்சி, மக்கள் நீதி மய்யம் கட்சிகளைச் சோ்ந்தவா்கள் இளையான்குடி வாள்மேல் நடந்த அம்மன் கோயில் திடல் முன்பு காத்திருந்தனா்.
வெயில் அதிகமாக இருந்ததால் கட்சியினா் கடைகளில் நிழலுக்கு ஒதுங்கினா். இதற்கிடையில் சரத்குமாா் தாமதமாக இளையான்குடி வந்தாா். அப்போது வேட்பாளா் சிவசங்கரி சரத்குமாரை வரவேற்று பிரசாரம் செய்ய வருமாறு கேட்டுக்கொண்டாா். ஆனால் சரத்குமாா் காரைவிட்டு இறங்காமல் தாமதமாகிவிட்டது, முதுகுளத்தூா் செல்ல வேண்டும் எனக்கூறிவிட்டு இளையான்குடியில் பிரசாரம் செய்யாமல் சென்றுவிட்டாா்.
சரத்குமாா் பிரசாரம் செய்யாததால் வேட்பாளா் சிவசங்கரி மற்றும் கூட்டணிக் கட்சியினா் ஏமாற்றடைந்தனா்.