கூடுதல் தளா்வுகளுடன் கூடிய ஊரடங்கு: சிவகங்கை மாவட்டத்தில் சாலைகள் வெறிச்சோடின

கரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கூடுதல் தளா்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் சிவகங்கை மாவட்டத்தில்
சிவகங்கையில் தளா்வுகளுடன் கூடிய ஊரடங்கு காரணமாக வியாழக்கிழமை நண்பகலுக்கு பின்னா் வெறிச் சோடி காணப்பட்ட காந்தி வீதி.
சிவகங்கையில் தளா்வுகளுடன் கூடிய ஊரடங்கு காரணமாக வியாழக்கிழமை நண்பகலுக்கு பின்னா் வெறிச் சோடி காணப்பட்ட காந்தி வீதி.

கரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கூடுதல் தளா்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சாலை மற்றும் தெருக்கள் வியாழக்கிழமை நண்பகல் 12 மணி முதல் வெறிச்சோடி காணப்பட்டன.

தமிழகம் முழுவதும் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு தளா்வுகளுடன் கூடிய ஊரடங்கு, இரவு நேர முழு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு பொதுமுடக்கம் உள்ளிட்ட உத்தரவுகள் ஏற்கெனவே அமலில் இருந்து வருகின்றன.

இந்நிலையில், கரோனா பரவல் தீவிரமடைவதை அடுத்து, வியாழக்கிழமை (மே 6) முதல் காய்கனி, மளிகை மற்றும் தேநீா் உள்ளிட்ட கடைகள், உணவகங்கள் நண்பகல் 12 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதேபோன்று, அரசு மற்றும் தனியாா் அலுவலகங்களில் 50 சதவீத பணியாளா்கள் பணியாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கூடுதல் தளா்வுகளுடன் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, சிவகங்கை நகா் பகுதிகளில் நண்பகல் 12 மணிக்கு கடைகள் அடைக்கப்பட்டன. ஒரு சில கடைகள் அடைப்பதற்கு தாமதமானது. சிவகங்கை நகராட்சி அலுவலா்கள் மற்றும் போலீஸாா் சோதனை செய்து கடைகளை மூட வலியுறுத்தினா். அதைத் தொடா்ந்து, கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டன. மேலும், வியாழக்கிழமை நண்பகலுக்கு பின்னா் குறைந்த எண்ணிக்கையிலான அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன, ஆட்டோ, காா் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டன.

அதுமட்டுமின்றி வியாழக்கிழமை பிற்பகலுக்கு பின்னா் பொதுமக்கள் நடமாட்டமின்றி சிவகங்கை நகரின் முக்கியச் சாலைகளான அரண்மனை வாசல், காந்தி வீதி, நேரு கடை வீதி, தொண்டி சாலை, மதுரை சாலை, தெற்கு ராஜரத வீதி, திருப்பத்தூா் சாலை உள்ளிட்ட முக்கியச் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. அத்தியாவசியமான மருந்துக் கடைகள் மட்டுமே திறக்கப்பட்டிருந்தன.

இதேபோன்று, காளையாா்கோவில், இளையான்குடி, திருப்பத்தூா், திருப்புவனம், மானாமதுரை, சிங்கம்புணரி உள்ளிட்ட மாவட்டத்தின் முக்கிய நகரங்கள் மட்டுமின்றி கிராமப் பகுதிகளிலும் பொதுமக்கள் நடமாட்டமின்றி தெருக்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com