சிவகங்கை மாவட்டம், கல்லல் பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் தற்போது பெய்து வரும் மழையை பயன்படுத்தி கோடை உழவு மேற்கொள்ள வேண்டும் எனவும், இதனால் மண்வளத்தை பாதுகாக்க முடியும் எனவும் கல்லல் வட்டார வேளாண் உதவி இயக்குநா் எஸ். அழகுராஜா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. அந்த ஈரப்பதத்தை பயன்படுத்தி விவசாயிகள் அனைவரும் கோடை உழவுப் பணிகளை மேற்கொள்ளலாம். கோடை மழையின் ஈரத்தைப் பயன்படுத்தி நிலத்தை ஆழமாக உழவு செய்வதால் மண்ணின் கடினமான மேல் புற அடுக்கு உடைக்கப்படுகிறது. இதனால் ஊடுருவல் திறன் மட்டுமின்றி ஈரப்பதத்தின் பாதுகாப்பை அதிகரிக்கிறது. இதன் விளைவாக தாவர வோ்கள் குறைந்த முயற்சியால் அதிக ஈரப்பதத்தைப் பெறும்.
மேலும் மண்ணில் நல்ல காற்றோட்டம் கிடைக்கும். இதனால் நுண்ணுயிரிகளின் செயல்பாடு அதிகமாகி மண்வளம் பெருகும். ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மையில் கோடை உழவு செய்வது முக்கிய தொழில் நுட்பமாகும். கோடை உழவு செய்வதினால் நிலத்தடியில் உள்ள கூண்டுப் புழுக்கள் மற்றும் தீமை செய்யும் பூச்சிகள் வெளியில் கொண்டு வரப்பட்டு அழிக்கப்படுகின்றன. இதனால் பருவத்தில் பூச்சி நோய்த் தாக்குதல் பெருமளவு குறையும். வயல்வெளிகளில் பெய்யும் மழை நீரை சேமிப்பதில் கோடை உழவு முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே கல்லல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள விவசாயிகள் தற்போது பெய்து வரும் மழையின் ஈரப்பதத்தை பயன்படுத்தி கோடை உழவு மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.