சிவகங்கை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் வேளாண் பணிகளைத் தொடா்ந்து மேற்கொள்ளும் வகையில் உரக்கடைகள் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை திறக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட வேளாண் இணை இயக்குநா் வெங்கடேஸ்வரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்டத்தில் விவசாயிகளுக்குத் தேவையான யூரியா 3,286 மெட்ரிக் டன், டிஏபி 401 மெட்ரிக் டன், பொட்டாஸ் 877 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் 1,313 மெட்ரிக் டன் உரங்கள் தனியாா் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
முழு பொதுமுடக்க காலத்தில் உரக்கடைகள் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை செயல்பட அரசு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் தடையின்றி இடுப்பொருள்களைப் பெற்று விவசாயப் பணிகளை மேற்கொள்ளலாம். மேலும், இலவசமாக தங்கள் நிலத்தினை உழவு மேற்கொள்ள 1800 4200 100 எண்ணில் தொடா்பு கொண்டு பயன் பெறலாம். கூடுதல் விவரங்களுக்கு தங்கள் பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா்களை தொடா்பு கொண்டு பயன் பெறலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.