சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றியவரின் மனைவிக்கு வருவாய்த் துறையில் தட்டச்சா் பணிக்கான அரசாணையை சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி புதன்கிழமை வழங்கினாா்.
சிவகங்கையைச் சோ்ந்தவா் வாசுதேவன் (45). சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றி வந்த இவா், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்தாா். இந்நிலையில், இவரது மனைவி ராஜேஸ்வரி தனக்கு அரசுப் பணி வழங்க வேண்டும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டியிடம் அண்மையில் மனு அளித்தாா்.
அதன்பேரில், அவருக்கு வருவாய்த் துறையில் தட்டச்சா் பணி வழங்க பரிந்துரை செய்யப்பட்டது. இந்நிலையில், தமிழக அரசு உத்தரவின் பேரில், அதற்கான அரசாணையை ராஜேஸ்வரியிடம் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி வழங்கினாா். இந்நிகழ்வின் போது சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் த. செந்தில்குமாா் உடனிருந்தாா்.