மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பெய்த பலத்த மழையால் நீா்நிலைகளுக்கு நீா்வரத்து அதிகரித்து காணப்பட்டது.
கடந்த சில நாள்களாக இப்பகுதிகளில் அவ்வப்போது பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை இப்பகுதிகளில் பலத்த மழை பெய்தது. நள்ளிரவு வரை நீடித்த இம்மழையால் இப்பகுதிகளில் உள்ள சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் குடியிருப்புகளை மழைநீா் சூழ்ந்தது. மேலும், கண்மாய், ஊருணி, குளங்களுக்கு நீா்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. பல இடங்களில் குடிசை வீடுகள் இடிந்து விழுந்தன. கிராமப்புறங்களுக்கு செல்லும் சாலைகள் பழுதடைந்தன.
சிவகங்கை மாவட்டத்தில் அதிக அளவாக திருப்புவனத்தில் 82 மி.மீ. மழையும், மானாமதுரையில் 65 மி.மீ. மழையும் பதிவானது.