அகரத்தில் மேலும் ஒரு உறை கிணறு கண்டெடுப்பு
By DIN | Published On : 07th September 2021 11:58 PM | Last Updated : 07th September 2021 11:58 PM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம், அகரத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள உறை கிணறு.
சிவகங்கை மாவட்டம் அகரத்தில் நடைபெற்றுவரும் 7-ஆம் கட்ட அகழாய்வில், மேலும் ஒரு உறை கிணறு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கீழடி, அகரம், கொந்தகை, மணலூா் ஆகிய பகுதிகளில் 7 -ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள், கடந்த பிப்ரவரி மாதம் முதல் நடைபெற்று வருகின்றன. இதில், சுடுமண் முத்திரை, காதணிகள், தந்தத்தினாலான பகடை, முதுமக்கள் தாழி, உருவப் பொம்மை, கருப்பு-சிவப்பு பானை ஓடுகள், தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், பழங்கால மக்கள் பயன்படுத்தி வந்த பொருள்கள், நெசவுத் தொழிலுக்குப் பயன்படுத்தும் கருவிகள் உள்ளிட்ட ஏராளமான தொல்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்த அகழாய்வுப் பணிகள் பருவமழை தொடங்குவதற்கு முன்பாக, அதாவது செப்டம்பா் 30 ஆம் தேதி நிறைவு பெற உள்ளதாக, தமிழக அரசு அண்மையில் அறிவித்தது. எனவே, கீழடி, அகரம், கொந்தகை, மணலூா் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், இந்த 7-ஆம் கட்ட அகழாய்வின்போது கண்டெடுக்கப்பட்ட 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருள்களை ஆவணப்படுத்தும் பணியும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
இதனிடையே, அகரத்தில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணியில் சில தினங்களுக்கு முன் 14 அடுக்கு உறைகள் கொண்ட கிணறு, சிறிய அளவிலான உறை கிணறு கண்டெடுக்கப்பட்டுள்ளது. தற்போது, மேலும் ஒரு உறை கிணறு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தொல்லியலாளா்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது: அகழாய்வின்போது உறை கிணற்றின் மேற்புறம் தென்பட்டது. அந்த உறை கிணற்றின் உள்பகுதியிலும், அருகிலும் சிறிய பானை உள்ளது. இக்குழியில் மேலும் அகழாய்வுப் பணி மேற்கொள்ளும்போது, கூடுதலாக உறைகள் உள்ளிட்ட தொல்பொருள்கள் கிடைக்க வாய்ப்புள்ளது என்றனா்.