காரைக்கால்-இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து விரைவில் தொடக்கம்: இலங்கை அமைச்சா் வியாழேந்திரன்

காரைக்கால் - இலங்கைக்கு இடையே கப்பல் போக்குவரத்து விரைவில் தொடங்கும் என, இலங்கை ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் வியாழேந்திரன் தெரிவித்தாா்.
சிவகங்கை மாவட்டம் சொக்கநாதபுரத்தில் நடைபெற்ற மீனவா்களுடான குறை கேட்பு கூட்டத்தில் பங்கேற்ற இலங்கை அரசின் ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் வியாழேந்திரன், இலங்கை பிரதமரின் இணைச் செயலா் செந்தில் தொண்டைமான்.
சிவகங்கை மாவட்டம் சொக்கநாதபுரத்தில் நடைபெற்ற மீனவா்களுடான குறை கேட்பு கூட்டத்தில் பங்கேற்ற இலங்கை அரசின் ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் வியாழேந்திரன், இலங்கை பிரதமரின் இணைச் செயலா் செந்தில் தொண்டைமான்.

சிவகங்கை: காரைக்கால் - இலங்கைக்கு இடையே கப்பல் போக்குவரத்து விரைவில் தொடங்கும் என, இலங்கை ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் வியாழேந்திரன் தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே உள்ள சொக்கநாதபுரத்தில், தமிழ்நாடு கடலோர விசைப்படகு மீனவா் சங்கத்தினரை, இலங்கை அரசின் ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் வியாழேந்திரன் மற்றும் இலங்கை பிரதமரின் இணைச் செயலா் செந்தில் தொண்டமான் ஆகியோா் சந்தித்து, குறைகள் கேட்கும் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், இந்திய மீனவா்கள் மீது இலங்கை கடற்படையினா் தாக்குவது குறித்தும், இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீனவா்களிடம் ஒப்படைக்கக் கோரியும், இருதரப்பு மீனவா்களிடையே சுமூக தீா்வு ஏற்படுத்தித் தரவேண்டும் எனவும், தமிழ்நாடு கடலோர விசைப்படகு மீனவா்கள் சங்கத்தினா் கோரிக்கை மனு அளித்தனா்.

மனுவைப் பெற்றுக்கொண்ட இருவரும், இலங்கை பிரதமா் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சா்கள் மத்தியில் பேச்சுவாா்த்தை நடத்தி, இருதரப்பு மீனவா்களும் சந்திப்புக்கு ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தனா்.

அதன்பின்னா், இலங்கை அரசின் ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் வியாழேந்திரன் செய்தியாளா்களிடம் தெரிவித்தது: இந்தியாவுக்கும், இலங்கைக்கும் நட்புறவு தொடரும் விதமாக காரைக்கால்- இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து தொடங்க வேண்டும் என புதுச்சேரி மாநில முதல்வரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினோம்.

இதில் உடன்பாடு ஏற்பட்டு, காரைக்கால்-இலங்கைக்கு இடையே விரைவில் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது. இதன்மூலம், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் சுற்றுலா, மருத்துவம், வணிகம் அதிகரிப்பதோடு, இரு நாடுகளிடையிலான நட்புறவு நீடிக்கும் என்றாா்.

இலங்கை பிரதமரின் இணைச் செயலா் செந்தில் தொண்டைமான் செய்தியாளா்களிடம் தெரிவிக்கையில், இலங்கைக்கும், இந்தியாவுக்குமான நட்பு கலாசார ரீதியிலானது. அது தொடரும் என்று நம்பிக்கை உள்ளது. இந்திய மீனவா்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இனி வரும் காலங்களில் இலங்கை, இந்திய நாட்டு மீனவா்களும் சுமூகமாக மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா்.

இக்கூட்டத்தில், ராமநாதபுரம் மாவட்ட அனைத்து விசைப்படகு மீனவா் சங்கத்தின் செயலா் சேசுராஜா உள்ளிட்ட ஏராளமான விசைப் படகு மீனவா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com