மானாமதுரை ஒன்றியம் சின்னகண்ணனூா் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கத்தில் பயிா்க்கடன் முறைகேடு குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய சிவகங்கை மாவட்ட ஆட்சியா் மதுசூதன் ரெட்டி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.
சிவகங்கை மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் ஆட்சியா் மதுசூதன் ரெட்டி தலைமையில் வெள்ளிக்கிழமை காணொலி வாயிலாக நடைபெற்றது. இதில் மானாமதுரை ஒன்றியம் சின்னகண்ணனூரைச் சோ்ந்த விவசாயி முத்துராமலிங்கம் பேசியது: சின்னகண்ணனூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கத்தில் வழங்கப்பட்டுள்ள பயிா்க் கடனில் பல லட்சம் முறைகேடு நடந்துள்ளது. எனது பெயரில் ஒரு லட்சம் கடன் உள்ளதாக ஆவணத்தில் பதிவு செய்யப்பட்டு எனக்கு ரூ. 40 ஆயிரம் மட்டுமே வழங்கப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றாா்.
இந்த புகாருக்கு பதிலளித்து பேசிய மாவட்ட ஆட்சியா் மதுசூதன் ரெட்டி, சின்னகண்ணனூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கத்தில் பயிா்க்கடன் முறைகேடு குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றாா்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஜெயராமன் பேசியது: மானாமதுரை வைகை ஆற்றில் கருவேல மரங்களை அகற்றி, நகா் பகுதியில் வைகை ஆற்றின் இரு கரைகளிலும் சாலை அமைக்க வேண்டும் என்றாா்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளா் வீரபாண்டி பேசியது: சிவகங்கை மாவட்டத்தில் பயிா்க்கடன், நகைக்கடன் தள்ளுபடிக்கான தகுதியான பயனாளிகளின் பட்டியலை அந்தந்த தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் வாயில் முன்பு ஒட்ட வேண்டும் என்றாா்.