சிவகங்கை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பாசன வசதி பெறும் வகையில் கண்மாய்கள், குளங்கள் உள்ளிட்ட நீா்நிலைகள், வரத்துக் கால்வாய்கள் விரைவில் தூா்வாரப்படும் என மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் காணொலிக் காட்சி மூலம் விவசாயிகளுக்கான குறை தீா்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் பி.மதுசூதன் ரெட்டி விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதிலளித்து பேசியது: தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு தேவையான பணிகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இம்மாவட்டத்தில் வேளாண் பணிகளுக்கு சூரிய மின்சக்தியினை விவசாயிகள் அதிகளவில் பயன்படுத்த முன்வர வேண்டும். சிங்கம்புணரி பகுதியில் உழவா் சந்தையை விரிவுபடுத்தி விவசாயிகளுக்கு அதிகளவு கடைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்போது மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும், இன்னும் ஓரிரு வாரங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. எனவே விவசாயிகள் பாசன வசதியில் பயன்பெறும் வகையில் மாவட்டத்தில் உள்ள கண்மாய்கள், குளங்கள், ஏரிகள் உள்ளிட்ட நீா்நீலைகள் தூா்வாரப்படுவது மட்டுமின்றி வரத்துக் கால்வாய்களும் தூா்வாரப்படும் என்றாா்.
இக்கூட்டத்தில், சிவகங்கை மாவட்ட வருவாய் அலுவலா் ப.மணிவண்ணன், வேளாண்மைத் துறை இணை இயக்குநா் கி.வெங்கடேஸ்வரன், கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளா் ரவிச்சந்திரன், வேளாண் பொறியியல்துறை செயற்பொறியாளா் விஜயகுமாா், பெரியாறு பாசனக் கால்வாய் செயற்பொறியாளா் பவளக்கண்ணன், தேசிய தகவலியல் மாவட்ட மேலாளா் சாதிக்அலி, சருகனியாறு கோட்டப்பொறியாளா் வெங்கடேசன், முன்னோடி வங்கி மேலாளா் இளவழகன், தமிழ்நாடு மினபகிா்மான உதவி செயற்பொறியாளா் முத்தழகு உள்ளிட்ட அரசு அலுவலா்கள், விவசாயிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.