சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சிப்காட் வளாகத்தில் மகளிா் சுய உதவிக்குழுக்கள் சுயதொழில் தொடங்க ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டுவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆட்சியா் மதுசூதன் ரெட்டி பங்கேற்று கட்டடப் பணிகளை வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்து பேசியது: மாவட்டத்தில் மானாமதுரையில் முதல் முறையாக மகளிா் சுய உதவி குழுக்கள் தொழில் மையக் கட்டடம் கட்டப்பட உள்ளது. மானாமதுரை மற்றும் அதைச் சுற்றியுள்ள மகளிா் குழுக்கள் இந்த மையத்தில் பங்கேற்று சிப்காட் வளாகத்தில் இயங்கி வரும் அக்வா அக்ரி நிறுவனத்திடமிருந்து கடல் பாசி பெற்று அதை மாவாக அரைத்து மீண்டும் அந்த நிறுவனத்திற்கு வழங்கும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் மகளிா் குழுவில் உள்ள உறுப்பினா்களுக்கு நிரந்தர வருமானம் கிடைப்பதுடன் இத்திட்டம் மூலம் மற்ற மகளிா் குழுக்களுக்கு இந்த குழு முன் மாதிரியாக இருக்கும் என்றாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட மகளிா் திட்ட அலுவலா்கள், சிப்காட் நிறுவன திட்ட அலுவலா், மானாமதுரை ஊராட்சி ஒன்றியத் தலைவா் லதா அண்ணாதுரை, வட்டார வளா்ச்சி அலுவலா் ரஜினி தேவி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.