மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சார்பில் 5 ஆயிரம் தபால்கள் முதல்வருக்கு அனுப்பி வைக்கும் போராட்டம் திங்கள்கிழமை நடத்தப்பட்டது.
இளையான்குடியில் நகருக்கு வெளியே 3 கி.மீ தொலைவில் ரூ.3.85 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைக்க கடந்த மாதம் தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அடிக்கல் நாட்டினார்.
ஏற்கனவே இளையான்குடியில் பேருந்து நிலையம் செயல்பட்டு வரும் பகுதியிலேயே அப்பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான தேவையில்லாத கட்டிடங்களை இடித்து விட்டு அந்த இடங்களையும் சேர்த்து விரிவாக்கம் செய்து புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என இளையான்குடி பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால் பொதுமக்கள் எதிர்ப்பையும் மீறி ஊருக்கு வெளியே பேருந்து நிலையம் அமைக்கப்படும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதையடுத்து இளையான்குடி புதிய பேருந்து நிலையம் எதிர்ப்பு குழு சார்பில் இங்கு புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல கட்ட போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே கடையடைப்பு நடத்தப்பட்ட நிலையில் தற்போது தமிழக முதல்வருக்கு 5 ஆயிரம் தபால்கள் அனுப்பி வைக்கும் போராட்டம் நடத்தப்பட்டது.
இதையடுத்து இளையான்குடி பொதுமக்கள் இங்கு உள்ள தபால் நிலையத்திற்கு வந்து புதிய பேருந்து நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் வாசகங்கள் கொண்ட தபால்களை அனுப்பி வைக்கும் போராட்டம் நடத்தினர்.
இப்போராட்டத்தில் புதிய பேருந்து நிலைய எதிர்ப்புக்குழு நிர்வாகிகள், பொதுமக்கள் அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து போராட்டக்குழு செயலாளர் துருக்கி ரபிக்ராஜா செய்தியாளர்களிடம் கூறுகையில் "பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி இளையான்குடி நகருக்கு வெளியே புதிய பேருந்து நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு எந்த வகையிலும் பயன் தராத புதிய பேருந்து நிலையத்தை ஊருக்கு வெளியே அமைக்க கூடாது. தற்போதுள்ள பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்து புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறோம். ஆனால் அரசு எங்களது கோரிக்கைகளை கண்டுகொள்ளாமல் உள்ளது. எனவே இளையான்குடியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அடுத்தடுத்து வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றும் போராட்டம் மற்றும் சென்னையில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்" என்றார்.