மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நடைபெற்று வந்த சித்திரைத் திருவிழா கடந்த புதன்கிழமை இரவு வீர அழகருக்கு நடந்த சந்தனக் காப்பு உற்சவத்துடன் நிறைவுபெற்று அழகர் தனது கோயிலுக்கு திரும்பினார்.
மானாமதுரை வீர அழகர் கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த 10 நாட்களுக்கு முன்பு தொடங்கியது. தினமும் இரவு சர்வ அலங்காரத்துடன் மண்டகப்படிகளில் எழுந்தருளி வீர அழகர் வீதி உலா வருதல் நடைபெற்றது.
சித்திரைத் திருவிழாவின் முத்திரை பதிக்கும் நிகழ்வாக கடந்த 16 ஆம் தேதி அழகர் வெண்பட்டு உடுத்தி குதிரை வாகனத்தில் ஆற்றுக்குள் இறங்கினார்.
அப்போது ஆற்றுக்குள் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அழகரைக் கண்டு தரிசனம் செய்தனர். அதைத் தொடர்ந்து, கருடசேவை உற்சவம் நடைபெற்றது. பின்னர் கடந்த புதன்கிழமை காலை கோயிலிலிருந்து பல்லக்கில் புறப்பாடாகிய வீர அழகர் மானாமதுரை மேல்கரையில் மேட்டுத்தெரு பகுதியில் உள்ள சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உள்பட்ட ஸ்ரீ அப்பன் பெருமாள் கோயிலுக்கு சென்றடைந்தார்.
அங்கு இரவு ராமானுஜ தாசர்கள் மண்டகப்படியில் அழகருககு திருமஞ்சனமாகி சந்தனகாப்பு உற்சவம் நடைபெற்று சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து அழகரை தரிசனம் செய்தனர். அதன்பின் கோயிலிலிருந்து புறப்பாடாகிய அழகர் பழைய பஸ் நிலையம் பகுதி, ரயில் நிலையம் எதிரே உள்ள பூரண சக்கர விநாயகர் கோயில், ரயில்வே காலனி சாய்பாபா கோயில், புறவழிச்சாலையில் உள்ள ஸ்ரீ வழிவிடு முருகன் கோயிலில் அமைக்கப்பட்டிருந்த திருக்கண்களில் எழுந்தருளி அருள்பாலித்தார்.
அப்போது ஏராளமான பக்தர்கள் திருக்கண்களுக்கு வந்து பூஜை நடத்தி அழகரை தரிசனம் செய்தனர். அதைத் தொடர்ந்து அப்பன் பெருமாள் கோயிலுக்கு சென்றடைந்த அழகர் மீண்டும் அங்கிருந்து பல்லக்கில் புறப்பாடாகி கோயிலுக்கு சென்றடைந்ததுடன் இந்தாண்டு வீர அழகர் கோயில் சித்திரைத் திருவிழா நிறைவு பெற்றது.