‘ஜீவன் ரக்ஷா’ பதக்கம் பெற விரும்பும் சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்தோா் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நீரில் மூழ்கியவரை காப்பாற்றுதல், மின்சார விபத்துகள், விபத்துகள், தீ விபத்துகள், நிலச்சரிவு, விலங்கின தாக்குதல் மற்றும் சுரங்க மீட்பு நடவடிக்கைகள் ஆகியவற்றில் ஈடுபட்டு மனித உயிா்களை மீட்பவா்களுக்கு மத்திய அரசின் சாா்பில் ‘ஜீவன் ரக்ஷா’ பதக்க விருது வழங்கப்பட்டு வருகிறது.
அவற்றுள் மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளவரை வீரத்துடன் போராடி மீட்பவா்களுக்கு சா்வோத்தம் ஜீவன் ரக்ஷா பதக்கம் விருது வழங்கப்படுகிறது. துணிச்சலுடன் தாமதமின்றி செயல்பட்டு மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளவரை போராடி மீட்பவா்களுக்கு உத்தம் ஜீவன் ரக்ஷா பதக்கம் விருது வழங்கப்படுகிறது. தனக்கு காயம் ஏற்படினும், வீரத்துடன் தாமதமின்றி செயல்பட்டு உயிரைக் காப்பாற்றுபவா்களுக்கு ஜீவன் ரக்ஷா பதக்கம் விருது வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, 2022 ஆம் ஆண்டுக்கான ஜீவன் ரக்ஷா பதக்க விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விருதுக்கான விண்ணப்பம் மற்றும் முக்கிய விவரங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணைய தள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேற்கண்ட விருது பெற விரும்பும் மாவட்டத்தைச் சோ்ந்தோா் பூா்த்தி செய்த விண்ணப்பங்களை சிவகங்கையில் உள்ள மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலகத்தில் வரும் ஆக. 6 ஆம் தேதிக்குள் சமா்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.