மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் சண்டையிட்டதால் நடந்து சென்ற பொது மக்கள் சிதறி ஓடினர். வாகனங்கள் கீழே விழுந்து சேதமடைந்தது.
திருப்புவனம் நகர்ப் பகுதியில் நூற்றுக்கணக்கான மாடுகள் பகல் நேரங்களிலிலும் இரவிலும் சாலையில் சுற்றித் திரிகின்றன. வீடுகளில் மாடு வளர்ப்பவர்கள் பால் கறக்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் மாடுகளை சாலையில் விட்டுவிடுகின்றனர். இந்த மாடுகள் பல நேரங்களிலல் சாலைகளை மறித்து நின்று தங்களுக்குள் முட்டிக்கொண்டு சண்டையிடுகின்றன. சாலைகளில் மாடுகள் படுத்துக் கொள்வதால் இருசக்கர வாகனங்களில் செல்லும் மக்கள் மாடுகளின் மீது மோதி காயமடையும் சம்பவங்களும், உயிர்ப்பலி நேரும் சம்பவங்களும் நடக்கின்றன.
சாலையில் திரியும் மாடுகளை கட்டுப்படுத்த வேண்டும் என பேரூராட்சி நிர்வாகத்திடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் திருப்புவனம் பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் திருப்புவனம் நகரில் சுற்றித்திரிந்த இரு மாடுகள் தங்களுக்குள் முட்டி கொண்டு சாலையை மறித்துக்கொண்டு சண்டையிட்டன. இவ்வாறு சண்டையிட்டபடி இந்த மாடுகள் வீதிகளில் இருந்த கடைகளில் புகுந்து அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தின.
சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களை இந்த மாடுகள் கீழே தள்ளின. இதனால் வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டது. சாலையில் நடந்து சென்ற பொதுமக்களை மாடுகள் முட்டி கீழே தள்ளின. சிலரை இந்த மாடுகள் சண்டையிட்டவாறு விரட்டி சென்றதைப் பார்த்து பொதுமக்கள், மாணவ மாணவிகள் மிரண்டு ஓடினர்.
அதன்பின் சிலர் சேர்ந்து சண்டையிட்டுக் கொண்டிருந்த இரு மாடுகளையும் பிரித்து விரட்டியடித்தனர். அதன் பின்னரும் இந்த மாடுகள் தனித்தனியாக சாலையில் சென்ற மக்களை விரட்டிச் சென்றன.
தொடர்ந்து முக்கால் மணி நேரம் இந்த மாடுகள் சாலையில் நின்று சண்டை போட்டுக் கொண்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. எனவே பேரூராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் திருப்புவனம் சுற்றித்திரியும் மாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது திருப்புவனம் மக்களின் எதிர்பார்ப்பாகும்.