மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் தற்போதுள்ள பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்து புதிய பேருந்து நிலையம் அமைக்க வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தினர். இதனால் வீதிகள் வெறிச்சோடின.
இளையான்குடி நகருக்கு மத்தியில் பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. தற்போது இடப் பற்றாக்குறை எனக் காரணம் காட்டி நகருக்கு வெளியே 3 கி.மீ தொலைவில் திருவள்ளூர் விலக்கு பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான ஆரம்பக் கட்ட பணிகள் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நகருக்கு வெளியே பேருந்து நிலையம் அமைத்தால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாவார்கள். வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள். எனவே நகருக்கு வெளியே புதிய பேருந்து நிலையம் அமைக்காமல் தற்போதுள்ள பேருந்து நிலையத்திற்கு அருகே பயன்பாட்டில் இல்லாத அரசு மருத்துவமனை உள்ளிட்ட அரசுக்கு சொந்தமான கட்டிடங்களை அகற்றி விட்டு தற்போதுள்ள பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்து புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் எனக் கோரி மார்ச் 15-ஆம் தேதி இளையான்குடியில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என வர்த்தகர்கள் அறிவித்திருந்தனர்.
இப்போராட்டத்திற்கு மனிதநேய ஜனநாயக கட்சி ஆதரவு தெரிவித்திருந்தது. இந்நிலையில் கடையடைப்பு போராட்டத்தை திரும்ப பெறச் செய்யும் நோக்கில் இளையான்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த சமாதான கூட்டத்தில் முடிவு எட்டப்படாததால் திட்டமிட்டபடி கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என வர்த்தகர்கள் அறிவித்திருந்தனர்.
அதன்படி இளையான்குடியில் அனைத்து வீதிகளிலும் உள்ள கடைகள் அடைக்கப்பட்டு வீதிகள் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன. இதனால் பொதுமக்கள் பொருள்கள் வாங்குவதற்கு மிகவும் அவதிப்பட்டனர்.