மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஸ்ரீ புஷ்பவனேஸ்வரர் சமேத சௌந்தரநாயகி அம்மன் கோயில் பங்குனித் திருவிழாவில் இன்று (புதன்கிழமை) திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
சிவகங்கை தேவஸ்தான நிர்வாகத்திற்கு உட்பட்ட இக்கோயிலில் பங்குனித் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய வைபவமாக நடைபெற்ற திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு கோயிலுக்குள் அமைக்கப்பட்டிருந்த திருமண மேடைக்கு பிரியாவிடை சமேதமாய் புஷ்பவனேஸ்வரர் சுவாமியும், சௌந்தரநாயகி அம்மனும் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளினர்.
அதைத் தொடர்ந்து சிவாச்சாரியார்கள் திருக்கல்யாணத்துக்கான திருமணத்திற்கான திருமாங்கல்ய நாணை வைத்து சம்பிரதாய பூஜைகளை தொடங்கி நடத்தினர். பூஜை நிறைவடைந்து மங்கள ஆரத்தி காட்டப்பட்டதும் மேளதாளம் முழங்க வேத மந்திரங்கள் ஒலிக்க காலை 11.40 மணிக்கு புஷ்பவனேஸ்வரர் சுவாமி சார்பில் சௌந்தரநாயகி அம்மனுக்கும் பிரியாவிடைக்கும் திருமாங்கல்ய நாண் அணிவிக்கப்பட்டு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
கோயிலுக்குள் திரண்டிருந்த திரளான பக்தர்கள் திருக்கல்யாணத்தை கண்டு தரிசித்தனர். திருக்கல்யாணம் முடிந்து மாலை மாற்றுதல் நிகழ்வு நடைபெற்றதும் சுவாமிக்கும், அம்மனுக்கும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து திருமணமான பெண்கள் கோயிலுக்குள் புது தாலிக்கயிறு மாற்றிக் கொண்டனர். கோயிலில் திருமாங்கல்யக் கயிறு, மஞ்சள், குங்குமம் உள்ளிட்டவை பெண்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
நாளை திருத்தேரோட்டம்
புஷ்பவனேஸ்வரர் கோயில் பங்குனித் திருவிழாவின் 9 ஆம் நாள் விழாவாக நாளை (17 ஆம் தேதி) காலை திருத்தேரோட்டம் நடைபெறுகிறது.