சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், கீழடியில் அகழ் வைப்பக கட்டுமானப் பணிகளை தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.
கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய 4 இடங்களிலும் 8 ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதில், கண்டெடுக்கப்பட்ட தொல் பொருள்களை காட்சிப்படுத்துவதற்காக கொந்தகை வருவாய் கிராமத்திற்குட்பட்ட பகுதியில் ரூ.11.03 கோடியில் அகழ் வைப்பகத்துக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
உலக தரத்தில் நவீன வசதிகளுடன் 31,919 சதுரஅடி பரப்பளவில் அமைக்கப்படும் இந்த அகழ் வைப்பகத்தில் நிர்வாக கட்டிடம், கல் தொல்பொருள் காட்சிக்கூடம், உலோக தொல்பொருள் காட்சிக்கூடம், திறந்தவெளி அரங்கம், மணிகள் மற்றும் தொல்பொருட்கள் காட்சிக்கூடம், விலங்குகள் குறித்த தொல்பொருள் காட்சிக்கூடம், சுடுமண் பானைகள் தொல்பொருள் காட்சிக்கூடம் என தனித்தனியே அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்த கட்டுமானப் பணிகளில் 85 சதவீதப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மீதமுள்ள பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், தமிழக பொதுப்பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு வெள்ளிக்கிழமை பார்வையிட்டார். முன்னதாக, அகழ் வைப்பக வளாகத்தில் மரக்கன்றுகளை நடவு செய்தார்.
அவருடன் அமைச்சர்கள் கே.ஆர்.பெரியகருப்பன், மூர்த்தி, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி, மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி ரவிக்குமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.