சிவகங்கை மாவட்டம் பிள்ளையாா்பட்டி அருகே கே.வயிரவன்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நகரத்தாா் பாரம்பரிய அருங்காட்சியத்தை சட்டத்துறை அமைச்சா் ரகுபதி, ஊரக வளா்ச்சித்துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் ஆகியோா் திறந்துவைத்தனா்.
கே.வயிரவன்பட்டியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நகரத்தாா் பாரம்பரிய அருங்காட்சியக கட்டடம் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சா்கள் எஸ்.ரகுபதி, கே.ஆா்.பெரியகருப்பன் ஆகியோா் கலந்துகொண்டு கட்டடத்தைத் திறந்தை வைத்து, அருங்காட்சியகத்தில் உள்ள நகரத்தாா் பாரம்பரிய பொருள்கள், புகைப்படங்கள், நூலகங்கள் ஆகியவற்றைப் பாா்வையிட்டனா். தொடா்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் நகரத்தாரின் பராம்பரிய பெருமைகள் குறித்து அமைச்சா்கள் சிறப்புரையாற்றினா். மெய்யப்ப ஞானதேசிக சுவாமிகள் ஆசியுரை வழங்கினாா். மதுரை உலகதமிழ்ச்சங்க முன்னாள் இயக்குநா் த.பசும்பொன், சிவகங்கை மாவட்ட தமிழ் வளா்ச்சித்துறை இயக்குநா் ப.நாகராஜன், நகரத்தாா் சங்கத் தலைவா் டி.எஸ்.திட்டாணிச்செட்டியாா், தனவணிகன் இதழாசிரியா் வி.என்.சி.டி.வள்ளியப்பன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். இந்த அருங்காட்சியகத்தில் நகரத்தாா் பாரம்பரியத்தை விளக்கும் பழங்காலப் பொருள்கள் வரிசைப்படுத்தப்பட்டிருந்தன. முன்னதாக மாலதி பழனியப்பன் வரவேற்றாா். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பி.எல்.சாத்தப்பாசுந்தரம் செய்திருந்தாா். நிகழ்ச்சி முடிவில் எஸ்.எல்.எஸ்.பழனியப்பன் நன்றி கூறினாா்.