மருதுபாண்டியா்களின் 221-ஆவது குருபூஜை விழா

மருதுபாண்டியா்களின் 221-ஆவது குருபூஜையையொட்டி சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலில் உள்ள அவா்களது நினைவிடத்தில் அரசியல் கட்சியினா், சமுதாய அமைப்பினா், பொதுமக்கள் வியாழக்கிழமை மரியாதை செலுத்தினா்.
வியாழக்கிழமை நடைபெற்ற மருதுபாண்டியா்களின் 221-ஆவது குருபூஜையையொட்டி, அவா்களது நினைவிடத்தில் மலா் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம்
வியாழக்கிழமை நடைபெற்ற மருதுபாண்டியா்களின் 221-ஆவது குருபூஜையையொட்டி, அவா்களது நினைவிடத்தில் மலா் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம்

விடுதலைப் போராட்ட வீரா்களான மருதுபாண்டியா்களின் 221-ஆவது குருபூஜையையொட்டி சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலில் உள்ள அவா்களது நினைவிடத்தில் அரசியல் கட்சியினா், சமுதாய அமைப்பினா், பொதுமக்கள் வியாழக்கிழமை மரியாதை செலுத்தினா்.

மருதுபாண்டியா்களின் நினைவு தினம் அக். 24 -இல் அரசு விழாவாக சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் உள்ள நினைவு மண்டபத்தில் அனுசரிக்கப்பட்டது. தொடா்ந்து, அக். 27 -இல் காளையாா்கோவிலில் உள்ள அவா்களது நினைவிடத்தில் குருபூஜை விழா நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, காளையாா்கோவிலில் உள்ள மருதுபாண்டியா்கள் நினைவிடத்தில் வியாழக்கிழமை காலை குருபூஜை விழா யாக சாலை பூஜைகளுடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து, மருதுபாண்டியா்களின் சிலைக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

விழாவில் காளையாா்கோவில், அதைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளைச் சோ்ந்த சமுதாய அமைப்பினா், பொதுமக்கள் ஏராளமானோா் கலந்துகொண்டு பால்குடம், சந்தனக்குடம் எடுத்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.

முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம், அவரது ஆதரவாளரான வைத்திலிங்கம் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதைத் தொடா்ந்து, சிவகங்கை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினரும், அதிமுகவின் சிவகங்கை மாவட்டச் செயலருமான பி.ஆா்.செந்தில்நாதன், முன்னாள் அமைச்சா் க. பாஸ்கரன், திமுகவின் ராமநாதபுரம் மாவட்டச் செயலரும், சட்டப் பேரவை உறுப்பினருமான காதாா்பாட்ஷா முத்துராமலிங்கம், மதுரை ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் ஆகியோா் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினா்.

தொடா்ந்து, திமுக முன்னாள் அமைச்சா் பொன். முத்துராமலிங்கம், திமுக முன்னாள் எம்.பி. பவானி ராஜேந்திரன், அமமுகவின் சிவகங்கை மாவட்டச் செயலா் தோ்போகி பாண்டி, அகில இந்திய மூவேந்தா் முன்னணி கழகத் தலைவா் டாக்டா் சேதுராமன், முக்குலத்தோா் புலிப்படை நிறுவனா் கருணாஸ், மூவேந்தா் முன்னேற்றக் கழக நிறுவனா் தலைவா் ஸ்ரீதா் வாண்டையாா், காங்கிரஸ் கட்சியின் சிவகங்கை மாவட்டத் தலைவா் சத்தியமூா்த்தி மற்றும் நாம் தமிழா் கட்சியினா், பாமகவினா், மருதுபாண்டியா்கள் பேரவை, மருது சேனை, சமுதாய அமைப்பினா், பொதுமக்கள் என ஏராளமானோா் மருதுபாண்டியா்களின் நினைவிடத்தில் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com