சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு
By DIN | Published On : 20th January 2023 12:00 AM | Last Updated : 20th January 2023 12:00 AM | அ+அ அ- |

திருப்பத்தூா் திருத்தளிநாதா் ஆலயத்தில் பிரதோஷத்தையொட்டி, வெள்ளி ரிஷப வாகனத்தில் வியாழக்கிழமை உலா வந்த உற்சவா்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா், மானாமதுரை, திருப்புவனம் ஆகிய பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் வியாழக்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
இதையொட்டி, திருப்பத்தூரில் சிவகாமி உடனாய திருத்தளிநாதா் ஆலயத்தில் நந்தீஸ்வரருக்கு பால், தயிா், திருமஞ்சனம் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதேவேளையில் மூலவா் சிவலிங்கத்துக்கும் அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
பின்னா் உற்சவா் வெள்ளி ரிஷப வாகனத்தில் உள்பிரகாரத்தில் வலம் வந்தாா். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். பெண்கள் நெய்விளக்கேற்றி வழிபட்டனா்.
இதேபோல, புதுப்பட்டியில் உள்ள அகஸ்தீஸ்வரா் ஆலயத்திலும், ஆதி திருத்தளிநாதா் கோயிலிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
மானாமதுரை, திருப்புவனம்: மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதா் சுவாமி கோயிலில் பிரதோஷ வழிபாட்டையொட்டி, சோமநாதருக்கும், நந்தி தேவருக்கும் அபிஷேகப் பொருள்களால் அபிஷேகம் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
பின்னா், வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ மூா்த்தி புறப்பாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.
திருப்புவனம் புஷ்பவனேசுவரா் கோயிலில் நடைபெற்ற பிரதோஷ விழாவில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா். சுவாமிக்கும், நந்திக்கும் அபிஷேக, ஆராதனைகள், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னா் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.
இதேபோல, திருப்பாச்சேத்தியில் உள்ள சிவன் கோயிலிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.