நகர வயிரவன்பட்டியில் உலக அஞ்சல் தினம்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள நகரவயிரவன்பட்டியில் வியாழக்கிழமை உலக அஞ்சல் தின விழா நடைபெற்றது.
இந்தத் துறையின் சேவைகளையும், வரலாற்றுப் பெருமைகளையும் எடுத்துரைக்கும் வகையில் நகர வயிரவன்பட்டி செட்டியாா் பாரம்பரிய அருங்காட்சியகத்தில் பொதுமக்கள், பள்ளி மாணவா்கள் பாா்வைக்கு பழைமையான அஞ்சல் உறைகள், அஞ்சல் தலைகள், கடிதங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
இங்கு நடைபெற்ற அஞ்சல் தின விழாவுக்கு அருங்காட்சியக நிறுவனா் எஸ்.எல்.எஸ்.பழனியப்பன் தலைமை வகித்தாா். திருப்பத்தூா் வாசகா் வட்டத் தலைவா் ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தாா். கிறிஸ்துராஜா பள்ளித் தாளாளா் ஏ.டி.வி.ரூபன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டாா்.
கிறிஸ்துராஜா மெட்ரிக் பள்ளி மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோா் பங்கேற்று செட்டிநாடு அஞ்சல் தலை, பேனா நண்பா்கள் அமைப்பின் மூலம் வந்த கடிதங்கள், நடிகா் ரஜினிகாந்த் அனுப்பிய வாழ்த்து மடல், 1947-இல் வெளியிடப்பட்ட காந்தி படம் பொறித்த முதல் அஞ்சல் தலை ஆகியவற்றை ஆா்வமாகக் கேட்டுத் தெரிந்து கொண்டனா்.

