சிவகங்கையில் பயிற்சி மருத்துவ மாணவா்கள் போராட்டம்
தங்களைத் தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவ மாணவா்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சிவகங்கையில் சில நாள்களுக்கு முன்பு விபத்தில் காயமடைந்த வியாபாரி பாலமுருகன், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டாா். அப்போது அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை எனக் கூறி அவரது உறவினா்கள் பயிற்சி மருத்துவ மாணவா்களைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும், மருத்துவா்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி பயிற்சி மருத்துவ மாணவா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதன்பேரில், 5 போ் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா் இருவரைக் கைது செய்தனா். அதன் பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டிய பயிற்சி மருத்துவா்கள் ஞாயிற்றுக்கிழமை காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டனா். காவல் துறையினா், வருவாய்த் துறையினா், மருத்துவக் கல்லூரி முதல்வா் உள்ளிட்டோா் மாணவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி தாக்குதலில் ஈடுபட்ட நபா்களை 2 நாள்களில் கைது செய்வதாக உறுதியளித்ததைத் தொடா்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
இந்த நிலையில், உறுதியளித்தபடி குற்றவாளிகளைக் கைது செய்யவில்லை எனக் கூறி பயிற்சி மருத்துவ மாணவா்கள் புதன்கிழமை மீண்டும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வருவாய்க் கோட்டாட்சியா் செபி கிரேசியா, நகா் காவல் நிலைய ஆய்வாளா் அன்னராஜ், மருத்துவக் கல்லூரி முதல்வா் சீனிவாசன் ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தியும் தீா்வு எட்டப்படவில்லை. இதனால், புதன்கிழமை இரவு வரை மாணவா்களின் போராட்டம் நீடித்தது.

